மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி இன்று (14-06-2011) செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது ரசிகர்களிடம் மாயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மாயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது ரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல் 4  தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்கின்றார்.

கரும்புலிகள் உட்பட விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களின் உயிர் தியாகம் தொடர்பாவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் பாடிவரும் மாயா பல இன்னல்களை அதனால் அனுபவித்திருந்தார்.
பொப் பாடகரான அமெரிக்கர் ஒருவரைத் திருமணம் முடித்துள்ள போதிலும், மாயாவிற்கும், அவரின் தாயாருக்கும் அமெரிக்கா செல்ல அந்த நாட்டின் அரசாங்கம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவை ஒன்றிற்கும் அஞ்சாத மாயா, தமிழ் மக்களிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.
அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் மற்றொரு தமிழனும் உலக மட்டத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒஸ்கார் உட்பட பல பன்னாட்டு விருதுகளுக்கு பரிந்துரைத்துப் போட்டியிடும் பணிகளிற்கு முன்னின்று உதவியதால், ஒஸ்கார் விருதைப் பெறும்போது ரஹ்மான் மாயாவிற்கு நன்றி கூறியது பலருக்கு நினைவிருக்கலாம்.
முற்று முழுதான வேறுபட்ட சூழலில் தொழில் நிமித்தம் வாழ்ந்தாலும், தனது இனத்தையும், மொழியையும், நாட்டுப்பற்றையும் மறக்காத மாயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.