May 2013

உத்தரிக்கும் ஸ்தலம்(PURGATORY)

இந்த பதிவினை எனது தளத்தில் வெளியிட  அநுமதி தந்த தந்தை .ஜான்  ஜோசப் அவர்களுக்கு  எனது நன்றி







A. மனிதன்:
1. மனிதன் என்றால் யார்?
உடலும், ஆன்மாவும் கொண்டவன் மனிதன் - 1தெச 5:23.
2.உடல், மனிதனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?
மண்ணிலிருந்து கிடைக்கிறது - ச.உ 12:7; தொ.நூ 2:7; 1கொரி 15:47.
3. உடலின் இயல்பு என்ன?
உடல், அழிந்து போகும் இயல்புடையது - 1கொரி 15:53.
4. மனிதன் இறந்த பின்பு, உடல் எங்கே போகும்?
உடல், தாம் வந்த இடமான, மண்ணுக்கே செல்லும் - ச.உ 12:7; தொ.நூ 3:19; சீரா 41:10; சா.ஞா 15:8.
5. ஆன்மா அல்லது உள்ளம், மனிதனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?
ஆன்மா, மனிதனுக்கு விண்ணிலிருந்து கிடைக்கிறது - ச.உ 12:7; 1கொரி 15:49.
6. ஆன்மாவின் இயல்பு என்ன?
ஆன்மா, அழியாத இயல்பு கொண்டது - 1கொரி 15:51-52; சா.ஞா 2 :23; 12:1.
7. மனித இறப்புக்குப் பின், ஆன்மா எங்கே செல்லும்?
ஆன்மா, தாம் வந்த இடமாகிய, விண்ணுக்கே செல்லும் - ச.உ 12:7; பிலி 3:20.

    உடலின் - ஆன்மாவின் தன்மைகள்:

    மண்ணிலிருந்து, மனிதன் பெற்றுக்கொண்ட உடல், என்ன தன்மை கொண்டது?
    உடல், பாவத்தன்மை கொண்டது - உரோ 7:25; சா.ஞா 1:4.
    விண்ணிலிருந்து, மனிதன் பெற்றுக்கொண்ட ஆன்மா, என்ன தன்மை கொண்டது?
    ஆன்மா, பரிசுத்த தன்மை கொண்டது - சா.ஞா 3:1.
    பாவ உடலோடு, பரிசுத்தமான ஆன்மா சேருவதால், உண்டாகும் விளைவு என்ன?
    ஆன்மா மாசுபடும் - உரோ 7:19-20; சா.ஞா 1:12.
    ஆன்மா, மாசுபடாமலிருக்க, ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
    உடலோடு உள்ள, நெருக்கத்தை (உறவை) குறைத்துக்கொள்ள வேண்டும் - 1கொரி 7:5.
    வாழ்க்கையில், ஆன்மாவுக்கு முதலிடமும், உடலுக்கு இரண்டாவது இடமும், கொடுக்க வேண்டும் - மத் 6:33.
    உடலின் இயல்புகளுக்கு, அடிமையாகாதபடி, மனதையும், உடலையும், கட்டுப்படுத்த வேண்டும் - 1கொரி 9:27.
    தன்னடக்கத்தைக் கைக்கொண்டு, மனதின் ஆசைகளை அடக்க வேண்டும் - 1கொரி 9:25.
    • ஆன்மா, வந்த இடத்துக்கு திரும்பிப் போக, உடலின் இச்சைகள், தடையாக இல்லாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும் - உரோ 8:3,7-8; 1பேது 2:11.
    • ஆத்மாவை எதிர்த்துப் போர்புரியும், ஊனியல்பின் இச்சைகளை, விட்டுவிட வேண்டும் - 1பேது 2:11.
    • இவ்வுடலில் குடியிருக்கும் வரை, நாம் ஆண்டவரிடமிருந்து அகன்றிருக்கிறோம், என்ற உணர்வோடிருக்க வேண்டும் - 2கொரி 5:6.
    • சாவுக்குள் இருக்கும், இந்த உடலினின்று, என்னை விடுவிப்பவர் யார் என்று, புனித பவுல் கூறியதை, எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - உரோ 7:24.
    • உடலின் இச்சைகள் என்றால் என்ன?
    உடலின் எட்டு தேவைகளில், ஒன்று இல்லாமல் கூட, என்னால் வாழ முடியாது என்ற, மனநிலையே, உடலின் இச்சை - சீரா 29:21; 39:26; உரோ 8:5.
    • உடலின் எட்டு தேவைகள் யாவை?
    1. பசிக்கு உணவு - சீரா 31:16
    2. களைப்பில் உறக்கம் - சீரா 31:20.
    3. நோய்க்கு மருந்து - சீரா 38:1.
    4. பருவத்தில் இணை - 1கொரி 7 :9.
    5. இணையில் சந்ததி - 2அர 4 :14-17
    6. தங்க வீடு - சீரா 29:21.
    7. ஆபத்தில் பாதுகாப்பு - யோசு 20:9.
    8. நாளைக்கு சேமிப்பு - சீரா 29:12; தொ.நூ 41:48.
    • ஆன்மா மாசுபடுவதால் உண்டாகும் விளைவு என்ன?
    உடல் இறந்ததும், ஆத்துமா உடனடியாக விண்ணுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் - மத் 25:46; 5:20.
    • உடலில் பாவம் எவ்வாறு உருவாகிறது?
    • முன்னோரிடமிருந்து, பிறப்பால் பிள்ளைகளுக்கு கிடைப்பது, ஜென்ம பாவம் - தி.பா 51 :5.
    • ஒரு மனிதன், உடலின் இச்சைகளுக்கு - மத் 5:28,29; மனதின் ஆசைகளுக்கு - 1திமொ 6:10; உலக மாயைகளுக்கு - 2திமொ 4:10; அலகையின் சூழ்ச்சிகளுக்கு - 2திமொ 2:26, அடிமையாகும் போது, உடலில் பாவம் உருவாகிறது.
    B. வாழ்வு:
    I. வாழ்வின் முடிவும் - மாசுபட்ட ஆத்மாவும் :
    1. உலக வாழ்வு முடிந்த பின்பு, மாசுபட்ட ஆத்துமாவின் நிலை என்ன?
    ஆன்மா, உத்தரிக்கும் ஸ்தலத்துக்குப் போய், பாவப்பரிகாரம் செய்து முடித்து, பரிசுத்தமடைந்து, மீண்டும் விண்ணுக்குச் செல்லும் - மத் 5 :25-26.

    2. வாழ்வு எத்தனை வகைப்படும்?
    1. உலக வாழ்வு - ச.உ 2 :3.
    2. மறுஉலக வாழ்வு - உரோ 8:5, 1கொரி 2:15, என இரண்டு வகைப்படும்.

    3. உலக வாழ்வும், அதன் தன்மைகளும் என்ன?
    • இது பாவ உலகம் - லூக் 4 :6 , யோவா 17 :15.
    • இந்த உலகத்தின் இன்பங்களுக்கு அடிமைப்படும் வாழ்வு, பாவ வாழ்வு- உரோ 6 :19.
    • மனிதன் இவ்வுலகில் அன்னியனும், நாடோடியும், தற்கால குடியுமாயிருக்கிறான் - எபி 11:13.
    • உலகில், மனித வாழ்வு நிலையற்றது - 1குறி 29:15.
    • இவ்வுலகின் செல்வம், பூச்சியரிக்கும், துருப்பிடிக்கும் - மத் 6 :19.
    • இவ்வுலகில், துன்புறுவதற்கென்றே, மனிதன் பிறக்கிறான் - யோபு 5 :7.
    • இவ்வுலகில், மனிதனின் வாழ்நாள் புல்லைப்போன்றது - எசா 40:6.
    4. மறு உலக வாழ்வு எத்தனை வகைப்படும்?
    1. விண்ணுலக வாழ்வு
    2. உத்தரிக்கும் ஸ்தல வாழ்வு – 1பேது 3 :19-20, என இரண்டு வகைப்படும்.
    5. விண்ணுலக வாழ்வு என்றால் என்ன?
    பாவ மாசுபடாத ஆத்துமா, உடலின் இறப்புக்குப் பின்பு, தாம் வந்த இடமாகிய விண்ணுலகுக்குச் சென்று, அங்கே நித்தியமாய் வாழும் வாழ்வு – 1தெச 5:23 , தானி 12:2-3.
    II. உத்தரிக்கும் ஸ்தலமும் - நரகமும் :

    1. உத்தரிக்கும் ஸ்தலம் உண்டா?
    ஆம் உண்டு - 2மக் 12 :45.
    2. உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன?
    இந்த உலகத்தில், தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாதவர்கள், இறந்த பின்பு, மறு உலகில் சென்று, பாவப்பரிகாரம் செய்து, மீட்பை அடையும் இடம், உத்தரிக்கும் ஸ்தலம் - 2மக் 12:45, 1கொரி 3 :15.
    3. உத்தரிக்கும் ஸ்தலம் எங்கே இருக்கிறது?
    பைபிளில், நாம் காணும் நரகம் தான், உத்தரிக்கும் ஸ்தலம் - 1பேது 3 :19, 4:6.
    4. நரகம் என்றால் என்ன?
    நரகம் என்றால் ஒரு இடமல்ல. அது ஒரு அனுபவம்.
    5. நரகம் என்பதன் பொருள் என்ன?
    • எபிரேய மொழியில், “நரகம்” என்றால், “இன்னேம் பள்ளத்தாக்கு” என்றும் - யோசு 15 :8, கிரேக்க மொழியில் “கெஹென்னா” அதாவது, “அவியா நெருப்பு” என்பதும் பொருள் - மத் 25 :41.
    • இதற்கு, “துன்பம்” அல்லது, “வேதனை” என்றும் பொருள் உண்டு.
    6. நரகத்துக்கு செல்வது என்றால் என்ன?
    துன்பத்துக்கு அல்லது வேதனைக்கு செல்வது என்று பொருள். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும் - மத் 25:30.
    7. இறந்த பின்பு, நரகம் அல்லது வேதனை உண்டா?
    உண்டு. அது உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடைபெறுகிறது - சக் 13:9. “உன்னைப் புடமிட்டு சுத்திகரிப்பேன்” - தானி 12:2-10.
    8. நரகம் என்பது தண்டனையா?
    • நரகம் என்பது தண்டனையே - லூக் 12:47-48.
    • அந்த தண்டனை, மனிதனை அழிக்க அல்ல – 1பேது 1 :6-7.
    • மாறாக, நரகத் தண்டனை ( துன்ப தண்டனை), மனிதனை மீட்கவே. நெருப்பில் தப்பியவர் போல், அவர்கள் மீட்கப்படுவர் - 1கொரி 3:15.
    9. மனிதன் இறந்த பின்பு, அவனுக்கு நரகத் தண்டனை எங்கே நடைபெறுகிறது?
    உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடைபெறுகிறது - மலா 3 :2-6.
    10. நரகத்தை நாம் ஏன் உத்தரிக்கும் ஸ்தலம் என்று சொல்கிறோம்?
    பைபிள் கூறும், நரகத்தில் நான்கு காரியங்கள் உள்ளன.
    • அணையா நெருப்பு - மத் 25:41.
    • அழுகையும் பற்கடிப்பும் அல்லது துன்பம் - மத் 25:30.
    • புடமிடுதல் - தானி 12 :2-10.
    • தண்டனை - மத் 23 :33.
    இந்த நான்கிற்கும் அர்த்தம் :
    • நெருப்பு - பரிசுத்தப்படுத்த - எசா 48:10.
    • துன்பமும் - பரிசுத்தப்படுத்த - எபி 12:7-10.
    • புடமிடுதல் - அழுக்கைப் போக்க - எசா 1:25.
    • தண்டனை - திருத்த - எபி 12:7, நீ.மொ 3:11-12.
    இந்த நான்கும், ஒருவருக்குக் கிடைத்தால், அவர் மீட்பை அடைகிறார். எனவே, “மீட்பைக் கொடுக்கும் நரகத்தை”, நாம் “உத்தரிக்கும் ஸ்தலம்” என்று சொல்கிறோம் - 1கொரி 3:15.
    11. உத்தரிக்கும் ஸ்தலம், நமக்கு தரப்படுகிறதா? அல்லது நாமாக ஏற்றுக்கொள்வதா?
    • இந்த உலக வாழ்வில் வரும் துன்பங்களை, ஒருவர் தம் பாவங்களுக்கு பரிகாரமாக, நன்றி, ஸ்தோத்திரம், ஆமென் சொல்லி, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாராயின், அவருக்கு இந்த “உலக வாழ்வே, உத்தரிக்கும் ஸ்தல வாழ்வாக மாறும்”. அவருக்கு மறு உலகில், உத்தரிக்கும் ஸ்தல வாழ்வு தேவையற்றது - 2மக் 7:18; சா.ஞா 3 :1.

    • ஆனால், பாவப்பரிகாரம் செய்யாமல், இன்னும் பாவத்திலேயே வாழ்ந்து மடியும் ஒருவர், மிகுந்த தயவும், இரக்கமும் உள்ள, கடவுளின் கருணையால், மறு உலகிலுள்ள, உத்தரிக்கும் ஸ்தலத்துக்குச் சென்று, அங்கே பாவப்பரிகாரமான துன்ப (நரக) வேதனைகளை அனுபவித்து, பின்பு விண்ணகம் சேருவார் - தானி 12 :10.
    III. பழைய ஏற்பாட்டில் - உத்தரிக்கும் ஸ்தலம் :
    • புதிய ஏற்பாட்டில் சொல்லப்படும், நரகம் என்ற வார்த்தை, பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா?
    இல்லை.
    • மனிதர் இறந்த பின்பு செல்லும் இடத்திற்கு, பழைய ஏற்பாட்டில் என்ன பெயர்?
    • எபிரேயத்தில் - செல் - SEL
    • கிரேக்கத்தில் - ஹாதேஸ் - HADES
    • ஆங்கிலத்தில் -ஷேயோல் - SHEOL
    • இந்த வார்த்தைகளின் பொருள் என்ன?
    • பூமிக்கு அடியில் உள்ள இடம் - எசே 31:15 , தி.பா 86 :13.
    • புழுதி படிந்த இடம் - யோபு 17 :12-16.
    • இருள் சூழ்ந்த இடம் - யோபு 10 :21.
    • ஆழ்ந்த அமைதி நிறைந்த இடம் - தி.பா 94 :17.
    • நினைவு அற்ற இடம் - (COMA) - தி.பா 88 :12.
    • நிறைவு அடையாத இடம் - நீமொ 27 :20.
    • 1. கீழுலகம், 2. கல்லறை, 3. அழிவின் தலம், 4. இருட்டுலகம், 5. மறதி உலகம், 6. பாதாளம் - தி.பா 88 :10-12.
    • ஷேயோலுக்குச் செல்பவர்கள் யார் யார்?
    இறந்த அனைவரும், அங்கே செல்வர். “என் மகன் இருக்கும் பாதாளத்துக்கு நானும் செல்வேன்”- தொநூ 37 :35. “பாதாளம் அனைவரையும் வரவேற்கிறது - எசா 14 :9.
    • அனைவரும் என்றால் பொருள் என்ன?
    • வாழும் மனிதர் அனைவரும், பாவ இயல்பு உடையவரே - உரோ 3 :12.
    • எனவே, இறக்கும் அனைவரும், கடவுளின் முன் குறை உள்ளவரே - ச.உ 7 :20.
    • எனவே, பாவிகளும், நல்லவர்களும் ஷேயோலுக்கு செல்வார்கள்.
    • பாவிகளுக்கு ஷேயோல் எத்தகையதாக இருக்கும்?
    • அங்கே, கடவுளால் மறக்கப்பட்டு, கடவுளின் பாதுகாப்பு இல்லாமல் இருப்பார்கள் - தி.பா 88 :5.
    • இதுவே, “பெரும் துன்ப நிலை” என்றும் கூறலாம் - யோபு 3 :1-12 , 17 :14-15.
    • நல்லவர்களுக்கு ஷேயோல் எத்தகையதாக இருக்கும்?
    • நல்லவர்களுக்கு, அது நம்பிக்கைக்குரிய இடம் - தி.பா 49 :15.
    • அங்கே, கடவுள் அவர்களோடு இருப்பார் - தி.பா 139 :8.
    • கடவுளின் பார்வை, அவர்கள் மேல் இருக்கும் - நீமொ 15 :3.
    • விண்ணுலகம் பற்றி, பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது?
    • ஏனோக்கு, எலியா போன்ற, தேவனோடு சஞ்சரித்த நீதிமான்கள், இறந்த பின்பு, நேராக விண்ணுலகிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் - தொ.நூ 5 :24 , 2அர 2 :11.
    • கடவுள் தன்னை, பாதாளத்துக்கு ஒப்படைக்காமல், இறந்த பின்பு, நேராக விண்ணுலகம் சேர்ப்பார் என்று, தாவீது நம்பினார் - தி.பா 16 :10.
    • புதிய ஏற்பாட்டில், நரகம் என்ற சொல்லின் விளக்கம் தருக - மத் 10 :28 , 5 :29-30.
    • “கெஹன்னா” என்ற கிரேக்கச்சொல், “நரகம்” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டது.
    • கெஹன்னா என்றால், “அவியா நெருப்பு” என்பது பொருள்.
    இதன் வரலாற்றுப் பின்னணி பின்வருமாறு:
    • இன்னோம் (hinnom) பள்ளத்தாக்கு என்பது, எருசலேமிற்கு மேற்கே உள்ள, ஒரு பள்ளத்தாக்கு - யோசு 15 :8.
    • பென் இன்னோம் (Ben hinnom) என்று, பிற்பாடு அழைக்கப்படும் இந்த இடத்தில், பிற ஜாதியார், தங்கள் தெய்வங்களுக்கு, சிறுவர்களை பலியிடுவர் - 2அர 23 :10.
    • பிற இனத்தாரைப் பின்பற்றி, இஸ்ராயேலரும் தங்கள் பிள்ளைகளை, அன்னிய தெய்வங்களுக்கு, இதே இடத்தில் பலியிட்டு, பாவம் செய்தனர் - 2குறி 28 :3, 33 :6 , எரே 7 :31-32,
    • பிற்காலத்திலும், இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், இந்த இடத்தில் தான், எருசலேமின் நகர சுத்திகரிப்பாளர்கள், தங்கள் குப்பைகளையும், அழுக்குப் பொருள்களையும் கொட்டுவர். மேலும், ஆலயத்தில் பலியிட்டு மீதி வருகின்ற பாகங்களையும், இங்கேயே தான் கொட்டி எரிப்பர் - லேவி 4 :11-13.
    • எனவே, இங்கே நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்.
    • இந்த “அவியா நெருப்புள்ள” இடத்தை, “கெஹன்னா” என்று கிரேக்கத்தில் கூறினர் - மத் 25 :41.
    • ஆண்டவர் வரும்போது, பாவிகளைத் தண்டிப்பது, அந்த கெஹன்னாவில் தான் என்ற நம்பிக்கையும், அந்நாட்களில், மக்களிடம் இருந்து வந்தது - மத் 25 :31-33. இவ்வாறு, புதிய ஏற்பாட்டின், “கெஹன்னா” என்ற கிரேக்க வார்த்தைக்கு, விளக்கம் அளிக்கப்படுகிறது.
    C. நரகம், நெருப்பு, துன்பம்
    நரகமும் - நெருப்பும் :
    • நரகத்தில், அவியா நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டேயிருப்பதால், அதை எரிநரகம் என்றே, வேதம் கூறுகிறது.
    • சகோதரனை அறிவிலியே என்பவன், “எரிநரகத்துக்கு” உள்ளாவான் - மத் 5 :22 ,18 :9.
    • எனவே, நெருப்பும் நரகமும் ஒன்றே.
    நெருப்பும் துன்பமும் :
    • “துன்பத்தீயில்”, நீங்கள் சோதிக்கப்படும்போது, மலைத்துப் போகாதீர்கள் - 1பேது 4 :12.
    • துன்பம் என்னும் உலை வழியாய், உன்னைத் தேர்ந்தெடுத்தேன் - எசா 48 :10. கடவுள், நெருப்பை அல்லது, துன்பத்தை பயன்படுத்துவது, பாவ மனிதனை சுத்தமாக்கி மீட்டெடுக்க.
    • அழியக்கூடிய பொன்னை நெருப்பில் புடமிடுவது போல, உன் விசுவாசம் புடமிடப்படுகிறது – 1பேது 1:6 ,7; தானி 12 :2-10.
    • பொன், வெள்ளியைப்போல, மெசியா புடமிடுவார் - மலா3 :2-3.
    • இவ்வாறு, “நெருப்பு”, “நரகம்”, “துன்பம்”, ஆகிய மூன்றும், ஒரே கருத்தில் வேதத்தில் கூறப்படும் வார்த்தைகள். இவற்றின் இறுதி நோக்கம் “மீட்பே” ஆகும்.
    D.நித்திய நரகம் (தண்டனை)
    புதிய ஏற்பாடு கூறும், நித்திய தண்டனைக்கு பொருள் என்ன?
    • “நித்திய” என்ற வார்த்தையை, “அற்பமான மனிதனுக்கு” ஒப்பிடலாமா?.
    • ஏனெனில், மனிதன் பெலவீனனும், குறையுள்ளவனுமாவான் - உரோ 7 :24.
    • பொதுவாக, ஒரு “செயல்” இருந்தால், அதற்கொரு “எதிர்ச்செயல்” அல்லது, பின்விளைவு உண்டு.
    • உதாரணமாக, திருவள்ளுவர் கூறுவார் “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”
    • அதுபோலவே, “பாவமும் - தண்டனையும்”. “பாவம்” என்று ஒன்று வந்துவிட்டால், அதன் கூடவே, “தண்டனையும்” பின்தொடர்கிறது.
    • எனவே, பாவம் உள்ளவரையில், தண்டனையும் “நித்தியமானது”.
    • ஆனால், ஒரு பாவம் செய்தவர், அந்த ஒரே பாவத்திற்கான தண்டனையை, நித்தியமாக பெற முடியாது.
    • மேலும், கடவுள் மனிதனுக்கு அளிக்கும், தண்டனையின் நோக்கம், “மீட்பு” என்றால், மனிதன் நித்தியத்திற்கும், தண்டனை பெற முடியாது - எபி 12 :10 , மலா 3 :2.
    மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையில், செய்யக்கருதிய தீங்கைக் குறித்து, மனம் மாறுகின்ற கடவுள் - யோனா 3 :10, தம் பிள்ளைகளை, பாவத்திலேயே அழிந்து போக விடமாட்டார். இதிலிருந்து, “உத்தரிக்கும் ஸ்தலம்” அல்லது, “பாவப்பரிகாரம் செய்யும் இடம்” என்ற ஒரு வாய்ப்பையும், கடவுள் மனிதனுக்கு வைத்துள்ளார் என்பது, நமக்கு மிகவும் தெளிவாக விளங்கும்.
    E.உலகத்தின் தண்டனையும் - கடவுளின் தண்டனையும்
    I.உலக நீதி
    • மனிதன், இயல்பிலேயே இயலாதவனும், குறையுள்ளவனும், பெலவீனனுமாயிருக்கிறான் - உரோ 7 :24.
    • ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும், தண்டனை என்பதும் உண்டு.
    • தண்டனை, திருத்துவதற்காகவே என்று, வேதம் கூறுகிறது - எபி 12 :7-10.
    • மனிதன் திருந்த, அவன் வாழ்நாள் முழுவதும், இடம் தர வேண்டும்.
    • தண்டனை, குற்றத்தின்மட்டில், பயம் உண்டாவதற்கும், பிறருக்கு எச்சரிக்கையாக இருப்பதற்குமேயொழிய, பழி தீர்ப்பதற்கல்ல.
    • எனவே, சமுதாயத்தில் மரண தண்டனையே கூடாது என்ற கருத்து, பரவலாக உள்ளது.
    • மனிதன், தான் செய்யும் செயல்களின் விளைவுகளை, “முழுமையாக அறிந்து”, புரிந்து, கிரஹிக்கும் தன்மை கொண்டவன் அல்ல. எனவே, அவன் செய்யும் பல பாவங்கள், “அறியாமல்” செய்வதே. உதாரணமாக : தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை இயேசு, “இவர்கள் “அறியாமல்” செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” - லூக் 23 :34, என்றார்.
    II.கடவுளின் நீதியும் - தண்டனையும்
    • கடவுள் நீதியுள்ளவர். ஏனெனில், அவர் இரக்கமும் மன்னிப்பும் உடையவர் – எசா 30 :18.
    • நீ நம்மிடம் திரும்பி வந்தால், உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வேன்; - சீரா 17:29.
    • ஏழு எழுபது முறை, சகோதரனை மன்னிக்க வேண்டும் என்று, மனித குலத்திற்கு கற்றுக்கொடுத்தவர் இயேசு – மத் 18 :22.
    • தன் மகன் எப்போது வருவான் என்று, காத்திருக்கும் தந்தை, நம் கடவுள் - லூக் 15:20.
    • இவ்வாறு, நீதியுள்ள கடவுள் (இரக்கமும் மன்னிப்பும்), தன் பிள்ளைகள் அழிந்து போக, நித்தியமாக தணடிக்க மாட்டார்.
    • கடவுள், மனிதனை தண்டிப்பது, அவனை அழிக்க அல்ல - தி.பா 118 :18 , எசே 33:11.
    • கடவுள், மனிதனை தண்டிப்பது, அவனை திருத்தி மீட்டெடுக்க - நீமொ 3 :11-12.
    • கடவுள், “தகப்பன் தன் பிள்ளையை தண்டித்து திருத்துவது போல” நம்மை தண்டித்து திருத்துகிறார் - எபி 12 :7-10.
    • எனவே, நரகத் தண்டனை - மத் 23 :33, மனிதனை திருத்தி மீட்கவே -1கொரி 3 :13-15.
    • பாதாளத்தினின்று, நம்மை விடுவிக்கும் பேரன்பு கடவுளுடையது - தி.பா 86 :13.
    • இவ்வாறு, கடவுளின் நீதியையும், அவர் அளிக்கும் தண்டனையையும், நாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது, தண்டனை மனிதனை மீட்பதற்காகவே, தரப்படுகிறது.
    F.கடவுளின் தன்மையும் - விருப்பமும்
    I.கடவுளின் தன்மை
    • “நொடிப்பொழுதே கோபம்” கொண்டு, என் முகத்தை திருப்பிக் கொண்டேன். “என்றுமுள்ள பேரன்பால்” உங்களை மீண்டும் அணைத்துக் கொள்வேன் - எசா 54 :7.
    • கடவுளின் கோபம் - ஒரு நொடிப்பொழுது.
      கடவுளின் இரக்கம் - என்றுமுள்ளது.

      கடவுளின் கோபத்திற்கு - எல்லையுண்டு.
      கடவுளின் இரக்கத்திற்கு - எல்லையில்லை.
      • முடிவில்லாத அன்பினால், உன்மேல் அன்பு வைத்தேன் - எரே 31 :3.
      • பேரன்பும், இரக்கமும் கொண்டவர் கடவுள் - தி.பா 69 :16.
      II.கடவுளின் விருப்பம்
      • உண்மையில், பொல்லாரின் “சாவையா நான் விருமபுகிறேன்”, அவர்கள், தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ, என் விருப்பம், - எசே 18 :23.
      • நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும், நான் இன்பம் காண்பதில்லை - எசே 18 :32.
      • எல்லா மனிதரும் மீட்பு பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென, கடவுள் விரும்புகிறார் - 1திமோ 2 :4.
      • என்னிடம் ஒப்படைக்கும் எவரையும், நான் அழிய விடாமல், இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே, என்னை அனுப்பியவரின் விருப்பம் - யோவா 6 :39.
      • ஒரு அறிவுள்ள மனிதன், அல்லது ஜீவி, தான் “அடைய முடியாத” ஒன்றை “விரும்பமாட்டார்”.
      • அவ்வாறிருக்க, ஞானத்தின் உறைவிடமாகிய கடவுள், ஒன்றை விரும்புகிறார் என்றால், அவர் அதை அடைய ஏதேனும் ஒரு வழியையும் வைத்திருப்பார்.
      • அந்த வழி தான், “உத்தரிக்கும் ஸ்தலம்”.
      • உத்தரிக்கும் ஸ்தலத்தில் சென்று, எல்லா மனிதரும், மீட்கப்படுகின்றனர்.
      • அவ்வாறு, கடவுளின் விருப்பம் நிறைவேறுகின்றது.
      G.கிறிஸ்துவின் வருகையும் - மீட்பும்
      I.இயேசு கிறிஸ்து, உலகில் வந்த நோக்கம்
      • பாவிகளை மீட்டு இரட்சிக்கவே, மனுமகன் இவ்வுலகிற்கு வந்தார் - 1திமொ 1 :15.
      • நேர்மையாளரை அல்ல, பாவிகளையே தேடி வந்தேன் - மத் 9 :13.
      • மருத்துவன் (இயேசு), நோயற்றவர்க்கன்று, நோயுற்றவருக்கே தேவை - மத் 9 :12.
      • பாவி என்று சொல்லும் போது, உலகில் குறுகிய காலம் வாழ்கின்ற, பாவ மனிதன் மட்டுமல்ல.
      • மாறாக, இறந்து போய், இன்னும் பாவ நிலையிலேயே இருப்பவர்கள், இனி வருகின்ற தலைமுறை, போன்ற இவர்களுக்கும் பாவி என்ற நிலை பொருந்தும்.
      • எனவே, இயேசு கிறிஸ்துவின் நோக்கம், எவரையும் அழியவிடாமல், எல்லாரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் - யோவா 6 :39.
      • இயேசு இந்த உலகில் வந்து, சாவின்மேல் வெற்றி கொண்டு, விண்ணகம் சென்றார்.
      • இயேசு ஒருபோதும், தோல்வியைத் தழுவமாட்டார்.
      • எனவே, கடவுள் இறந்துபோன பாவிகளையும், மீட்கவே, உத்தரிக்கும் ஸ்தலத்தை வைத்தார்.
      • இவ்வாறு, இயேசு கிறிஸ்து, இவ்வுலகில் வந்ததன் நோக்கம், நிறைவேறுகின்றது.
      H.உலகமும் - உத்தரிக்கும் ஸ்தலமும்
      • “உத்தரிக்கும் ஸ்தலம்” என்பது, பாவப்பரிகாரம் செய்கின்ற இடம்.
      • இந்த உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு, இவ்வுலகில் வாழும்போது, பாவப்பரிகாரம் செய்யாதவர்கள் மட்டுமே, செல்கின்றனர்.
      • ஆனால், உலகில் வாழும்போதே, பாவப்பரிகாரம் செய்து முடித்தவர்கள், நேராக, விண்ணக பாக்கியத்தை அடைகின்றனர்.
      • உலகமே உத்தரிக்கும் ஸ்தலம் ஆவது எவ்வாறு?
      • இம்மையில் மனிதன் பாவ சார்புடையவன்
      • அன்றாடம், அவன் தன் பாவத்திற்காக, பரிகாரம் செய்ய வேண்டும்.
      • “உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்” என்பது, உலகப் பழமொழி.
      • அதுபோலவே, “பாவம் செய்தவன், பரிகாரம் செய்துத்தான் ஆக வேண்டும்”.
      • அன்றாட சிலுவையை, நாள்தோறும் சுமந்து, இயேசுவுக்குப் பின்னால் சென்று, அவன் பரிகாரம் செய்கிறான்.
      • இதனால், அவன் பாவ விடுதலை அடைகிறான் - 1பேது 4:1.
      • இவ்வாறு, அன்றன்றுள்ள பாவங்களுக்காய், அன்றன்றுள்ள சிலுவையை, மகிழ்ச்சியோடு தூக்கி சுமக்கின்ற மனிதனுக்கு, “இக வாழ்வே, உத்தரிக்கும் வாழ்வாக” மாறுகிறது – மத் 16 :24 , 6 :34 , மாற் 10 :30.
      • இகத்தின் வாழ்வை, உத்தரிக்கும் ஸ்தலமாக மாற்றிக்கொண்ட ஒருவருக்கு, பரத்தில் உத்தரிக்கும் ஸ்தலம் தேவையற்றது.
      உதாரணங்கள்
      உலகத்தையே உத்தரிக்கும் ஸ்தலமாகக் கொண்டவர்கள் :
      1. ஏழு பிள்ளைகளும் தாயும் :
      • இவர்கள், கடவுளின் கட்டளையைக் கடைபிடித்ததற்காக, தங்களுக்கு வந்த பாடுகளை (துன்பங்களை), பாவப்பரிகாரமாக ஏற்றனர் - 2மக் 7 :18.
      • எனவே, அவர்கள் விண்ணக வீட்டை, சென்றடைந்தனர் - 2மக் 7 :9.
      • அவர்களுக்கு, இவ்வுலகமே உத்தரிக்கும் ஸ்தலமாக அமைந்தது - 2மக் 7 :7-10.
      2. நல்ல கள்ளன் :
      • இயேசுவோடு, சிலுவையில் தொங்கி நின்ற இரு கள்வர்களில், ஒருவன் பாவப்பரிகாரத்தைச் சிலுவையிலேயே செய்தான் - லூக் 23 :41.
      • நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம் - லூக் 23 :41.
      • உலகத்தையே உத்தரிக்கும் ஸ்தலமாக ஏற்றுக்கொண்ட அவனுக்கு, வான்வீடு காத்திருந்தது - லூக் 23 :43.
      • “நீர் இன்று, என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என, உறுதியாக உமக்கு சொல்கிறேன்” - லூக் 23 :43.
      3. ஏழை இலாசர் :
      • இலாசர், பணக்காரனின் வீட்டு வாயிலின் முன், உண்ண உணவின்றி, உடையின்றி, வறுமை, நோய், துன்பத்தால், மிகவும் கஷ்டங்களை அனுபவித்தான்.
      • இவ்வுலகில் வாழும்போதே, உத்தரிக்கும் ஸ்தலத்தை அனுபவித்த அவர், இறந்த பின், ஆபிரகாமின் மடியில் அமரும், பாக்கியம் பெற்றார் - லூக் 16 :20-22.
      மறு உலகில் உத்தரிக்கும் ஸ்தலம்
      பணக்காரன் :
      • அவன், இவ்வுலக வாழ்வில், தினமும் விருந்துண்டு, இன்புற்றிருந்தான் - லூக் 16:19.
      • இவ்வுலகில், அவன் பாவம் செய்தானேயொழிய, பாவப்பரிகாரம் செய்யவில்லை.
      • எனவே, அவன் பாதாளத்தில் வதைக்கப்பட்டான் - லூக் 16 :23.
      • பாதாளத்தில், அவன் மனம்திரும்பி, மீட்படைய, கடவுள் உத்தரிக்கும் ஸ்தல வாய்ப்பைக் கொடுத்தார்.
      I.இறந்தவர்க்கு நற்செய்தி
      இயேசு அறிவிக்கும் நற்செய்தி, “மாபெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தி” - லூக் 2:10. இந்த நற்செய்தி, இறந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக, பேதுரு கூறுவார்.
      “அந்நிலையில், இயேசு “காவலில்” இருந்த ஆவிகளிடம் போய்,
      தம் செய்தியை அறிவித்தார் - 1பேது 3 :19.

      “நோவா பேழையை செய்துகொண்டிருந்த நாட்களில்,
      பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த
      “கடவுளை, அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை” – 1பேது 3 :20.

      “இறந்தோர் ஊனுடலில் மனிதனுக்குரிய தீர்ப்பு பெறுவர்.
      ஆவியில், கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர்.
      இதற்காகவே, “இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது”
      1பேது 4 :6.
      காவலில் இருந்த ஆவிகள் :
      • இங்கே, “காவலில்” என்றால், சிறையில் என்று பொருள்.
      • சிறையில் இருப்பவர்கள், குற்றம் இழைத்தவர்கள்.
      • அவர்கள், நிரந்தரமாக அங்கே இருக்கப் போவதில்லை.
      • தண்டனை முடிந்து, அவர்கள் வெளியே வருவர்.
      ஆவிகள் :
      • இந்த வார்த்தை, கிரேக்கத்தில், “நெயுமா” என்பது.
      • இதற்குப் பொருள், “அறிவுள்ள ஆவிகள்” (Rational Spirits).
      • எனவே, காவலில் இருக்கும் ஆவிகள், புரிந்து, தீர்மானிக்கும் சக்தி கொண்டவை.
      கடவுளை ஏற்றுக்கொள்ளாத ஆவிகள் :
      • இந்த ஆவிகள் செய்த குற்றம் என்னவென்றால், கடவுளைப் புறக்கணித்தது.
      • எனவே, குற்றம் செய்த ஆவிகள், இன்னும் விடுதலையின் நம்பிக்கையோடு காத்திருக்கும் இடம் ஒன்று இருந்தது.
      • அந்த இடத்தை, புனித பேதுரு “சிறை” (PRISON) என்கிறார்.
      பாதாளமும் - சிறையும் :
      • யூத மரபுப்படி, இறந்தவர் இருக்கும் இடம், பாதாளம் அல்லது கீழுலகம்….
      • பேதுரு, தான் அறிந்த, பழக்கப்பட்ட அந்த வார்த்தையை இங்கே பயன்படுத்தவில்லை.
      • மாறாக, “சிறை” என்ற வார்த்தையை, மிகுந்த பொருளோடு கையாண்டார்.
      • இந்த சிறையைத்தான் நாம், இறந்தவர் பாவக்கடன் தீர்க்கும் இடம், அல்லது மனம் திரும்பும் இடம், அல்லது உத்தரிக்கும் ஸ்தலம் என்கிறோம்.
      இயேசுவின் நற்செய்தி :
      • “எல்லா” மக்களினத்தாரும், “ஏற்றுக்கொள்ளுமாறு” நற்செய்தி அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும் - மத் 24 :14.
      • “எல்லா மக்களினத்தாரும்” என்பது, இப்போது வாழ்கின்ற, இதற்கு முன்னால் வாழ்ந்த, இனி பிறக்கப்போகின்ற மக்கள் என்று பொருள்.
      • எல்லாரும், “ஏற்றுக்கொள்ளுமாறு” தான், நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
      • முன்னால் வாழ்ந்தவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்வது வரை” நற்செய்தி அறிவிக்கப்படும்.
      • இந்த நற்செய்தியை, அறிவிப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், பாவத்தோடு இறந்தவர்கள், எங்கேயோ ஓர் இடத்தில் இருந்துத்தான் ஆக வேண்டும். அந்த இடத்தை, “காவல்” அல்லது “சிறை” அல்லது “உத்தரிக்கும் ஸ்தலம்” என்று, பைபிள் கூறுகிறது.
      சொல்லாலும் செயலாலும் நற்செய்தி :
      • இயேசு, வார்த்தையாலும், செயலாலும் நற்செய்தி அறிவிக்கிறார்.
      • வார்த்தையை ஏற்றுக்கொள்ளாவிடில், செயலையாவது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று, இயேசு விரும்புகிறார் - யோவா 14 :11.
      • இயேசுவின் செயல், எப்போதும் அன்பும், நன்மையும் நிறைந்ததாகவே இருக்கும்.
      • “என் வீடு அது ஜெபவீடு, அதை கள்வர் குகையாக்காதீர்” - லூக் 19:46 - என்று, இயேசு சொல்லால் நற்செய்தி அறிவித்தார்.
      • “கயிறுகளால் சாட்டைபின்னி, எல்லாரையும் துரத்தினார்” - யோவா 2:15 - இங்கே, இயேசு செயலால் நற்செய்தி கூறினார்.
      • இங்கே, “அடித்து நொறுக்கி” இயேசு, நற்செய்தி அறிவிக்கிறார்.
      • இயேசுவின் வார்த்தையும் செயலும் நற்செய்தியே. அதன் நோக்கம், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்.
      • பேசுவதுபோலவே, “அடிப்பதும்” ஏற்றுக்கொள்வது வரை நடைபெறும்.
      • “தகப்பன் தண்டித்து திருத்துவது போல” என்று, இதை பைபிள் கூறுகிறது -எபி 12:7.
      • எனவே, “சிறையில்” நடைபெறும் தண்டனையும், நற்செய்தி அறிவிப்பதே.
      துன்பமும் - மனம்திரும்புதலும் :
      • இங்கே, பாவிக்கு ஆண்டவர் அளிக்கும் துன்பம், அவர்களை மீட்கும் நற்செய்தி.
      • யோவேலின் புத்தகத்தில், பாவம் செய்த மக்களுக்கு, கடவுள் துன்பம் தந்தார் – யோவே 1 :6,7,10,12,16-20.
      • தொடர்ந்து, “இப்பொழுதாவது திரும்பி வாருங்கள்” என்றார் - யோவே 2 :12-17.
      • வாழும் பாவிகளுக்கு, கடவுள் தரும் துன்பம், அவர்களை மனம் திருப்பவே - ஓசே 5 :15.
      • இறந்த பாவிகளுக்கும், கடவுள் இதையே செய்;கிறார். ஏனெனில், இறந்தவர் அவரது குரலைக் கேட்பர். கேட்டு வாழ்வடைவர் - யோவா 5 :25, உரோ 14 :9.
      நற்செய்தியின் தன்மைகள் :
      • நற்செய்தியால், தேவ கிருபை உண்டாகிறது - தி.ப 20 :24.
      • நற்செய்தி, ஒளியை உண்டாக்குவது – 2கொரி 4 :4.
      • அமைதி அருளும் நற்செய்தி - எபே 6 :15.
      • விசுவாசம் உண்டாக்கும் நற்செய்தி - உரோ 10 :14,17.
      • மீட்பை அளிக்கும் நற்செய்தி - எபே 1 :13.
      • தூய ஆவி தரும் வல்லமையை அருளும் நற்செய்தி – 1தெச 1 :5.
      • அழியா வாழ்வை, ஒளிரச் செய்யும் நற்செய்தி - 2திமொ 1 :10.
      தேவ கிருபையை ஈந்து, விசுவாசத்தை உருவாக்கி, மீட்பளித்து, அபிஷேகித்து, அழியா வாழ்வைத் தரும் நற்செய்தி, இறந்தவர்க்கு அறிவிக்கப்படுகிறது. அந்த நற்செய்தி, பலன் தராதா? இறந்தவர்க்கு மீட்பளிக்காத ஒரு நற்செய்தியை, இயேசு அறிவிப்பாரா? அப்படியே, இயேசுவின் நற்செய்தியால், இறந்தவர் மீட்படைந்தால், உத்தரிக்கும் ஸ்தலம் என ஒன்று, உண்டு என்பதை, நம்மால் மறுக்கமுடியுமா?
      இறந்தவர்க்கு நற்செய்தியின் நோக்கம் - 1பேது 4:6
      • இறந்தோர் தங்கள் “ஊன் உடலில்” மனிதனுக்குரிய தீர்ப்புப் பெறுவர்.
      • பின்பு வாழ்வு பெறுவர்.
      • இதற்காகவே, இறந்தோருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
      பேதுரு காணும் உத்தரிக்கும் ஸ்தலம் :
      • ஆக, மேற்சொன்ன விளக்கங்களில், உத்தரிக்கும் ஸ்தலம் என, ஒன்று உண்டு என்பது தெளிவாகிறது.
      • அந்த இடத்துக்கு, காவல் அல்லது “சிறை” (PRISON) என்று பெயர்.
      • அங்கே இருப்பவர்கள், குற்றம் செய்த மனிதர்கள்.
      • இவர்கள், உணர்வும், அறிவும் உள்ள ஆவிகள் - நெயுமா.
      • இவர்கள் அங்கே இருப்பது, சிறையிலிருந்து விடுதலை அடைய.
      • அந்த விடுதலையை அளிப்பவர், இயேசு கிறிஸ்து.
      • விடுதலையை, தன் நற்செய்தி மூலமாக, (செயலால்) அளிக்கிறார்.
      ஆம் பிரியமானவர்களே! உத்தரிக்கும் ஸ்தலம் என ஒன்று, நிச்சயமாக உண்டு. இவ்வுலகில் வாழும்போது, தம் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாதோர், அதாவது மனம் திரும்பாதோர் - மறு உலகில், தண்டனை பெற்று, மனம் திரும்பும் இடமே, உத்தரிக்கும் ஸ்தலம்.
      “சாவு” என்பது, பாவத்தின் தண்டனையே. பாவம் போக்கப்படும் போது, சாவும், தாமாக போய்விடும். “சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப்படும்” – 1கொரி 15:26. இந்த உலகில், பிறக்கும் கடைசி மனிதனில் ஆட்சிபுரியும் “சாவு” அழிக்கப்படுவது வரை, இயேசுவின் மீட்புப்பணி தொடரும். இங்கே உலகில், அங்கே உத்தரிக்கும் ஸ்தலத்தில்.
      இறந்தவர்க்காக திருமுழுக்கு
      இறந்தவர்களுக்காக, சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே! ஏன் அப்படி செய்கிறார்கள்? இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால், அவர்களுக்காகத், திருமுழுக்குப் பெறுவானேன்? – 1கொரி 15 :29.
      பாவத்தில் இறந்தவர்களுக்காக ஜெபம்
      தானியேலின் ஜெபம் - தானி 9 :3-19.
      தானியேலும், மக்களும் அடைந்த துன்பம் :
      • எங்களுக்கு அவமானமே கிடைத்துள்ளது - தானி 9 :7.
      • நாங்கள் தொலை நாட்டுக்கு விரட்டப்பட்டுள்ளோம் - தானி 9 :7.
      • திருச்சட்டத்தில், எழுதியுள்ள எல்லா சாபக்கேடும், எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன - தானி 9 :11.
      • உலகில் எங்களுக்கு, உற்ற துன்பம் போல், வேறு யாருக்கும் நடக்கவே இல்லை - தானி 9 :12.
      • ஆண்டவருடைய சினத்துக்கும், சீற்றத்துக்கும், நிந்தைக்கும் நாங்கள் உள்ளானோம் - தானி 9 :16.
      இந்த துன்பத்துக்கு காரணம் :
      • நாங்களும், எங்கள் முன்னோரும், செய்த பாவம்.
      • நாங்கள் பாவம் செய்தோம் - தானி 9 :5.
      • எங்கள் தலைவர்கள், தந்தையர், அரசர் இவர்கள் கொடிய பாவம் செய்தார்கள் - தானி 9 :6, 16.
      மனஸ்தாபமும் - பாவ அறிக்கையும் :
      • நான் நோன்பிருந்து, சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து மன்றாடினேன்.
      • நாங்கள் வழிதவறினோம் , உம் கட்டளைகளை கைவிட்டோம் - தானி 9 :5.
      • உமக்கு எதிராக, துரோகம் செய்தோம் - தானி 9 :7.
      • உமது இறைவாக்கினர் கூறிய வழியில், நடக்கவில்லை - தானி 9 :10,11.
      • நாங்களும், எங்கள் முன்னோரும், உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை - தானி 9 :13.
      • எங்கள் பாவங்களாலும், எங்கள் “முன்னோரின்” கொடிய பாவங்களாலும், இன்று துன்புறுகிறோம் - தானி 9 :16.
      மன்னிப்பு வேண்டி ஜெபம் :
      • ஆண்டவரே! உம்மிடம் இரக்கமும், மன்னிப்பும் உண்டு - தானி 9 :9.
      • எங்கள் கடவுளே! எங்களை மன்னித்தருளும். எங்களுக்காக செயலாற்ற வாரும் - தானி 9 :17-19.
      தானியேலின் ஜெபம் கேட்கப்பட்டது :
      “தானியேல் ! அஞ்சாதே! உய்த்துணர வேண்டும் எனும் உள்ளத்தோடு, உன் கடவுள் முன்னிலையில், நீ உன்னைத் தாழ்த்திக்கொண்ட முதல் நாள் தொடங்கி, உன் மன்றாட்டு கேட்கப்பட்டு வருகிறது. உன் மன்றாட்டுக்கேற்ப, இதோ! நான் வந்துள்ளேன்” - தானி 10 :12.
      இன்றைய வாழ்வோரின் பாவமும், நேற்றைய முன்னோரின் பாவமும் மன்னிக்கப்பட்டது :
      • இங்கே முன்னோர் செய்த பாவங்களாலும், தாங்கள் செய்த பாவங்களாலும், துன்பம் வந்துள்ளது.
      • தாங்கள் செய்த பாவங்களுக்காக, இங்கேயே தண்டனை அனுபவிக்கிறார்கள்.
      • அதுபோலவே, முன்னோர் செய்த பாவங்களுக்கும், தண்டனை உண்டு.
      • அந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்கும் இடமே, “உத்தரிக்கும் ஸ்தலம்”.
      • தானியேல், அவர்களின் பாவங்களும், தங்களின் பாவங்களும், மன்னிக்கப் படும்படி, மன்றாடுகிறார் - தானி 9 :16 - 19..
      • அவர் ஜெபம் கேட்கப்பட்டதாக, விண்ணிலிருந்து பதில் வந்தது - தானி 10 :12.
      • சைரசு மன்னனின் வழியாய், இங்கே தானியேலுக்கு விடுதலை - 2குறி 36 :22,23.
      • இயேசு கிறிஸ்துவின், பாடுகளாலும், மரணத்தாலும் அங்கே முன்னோருக்கு விடுதலை - மத் 20 :28 , 26 :28.
      • இவ்வுலகில் வாழ்வோர், தங்கள் பாவங்களுக்குப் பொறுத்தல் வேண்டி, ஜெபிப்பது போலவே, தங்கள் முன்னோரின் பாவங்களுக்காகவும், தானியேலைப் போல ஜெபிக்கலாம்.
      • அந்த ஜெபம் கேட்கப்படும், விடுதலையும் கிடைக்கும் - தானி 10 :12
    • நன்றி http://www.catholicpentecostmission.in/index.html