தமிழர் பகுதி சிங்கள மயமாக சுமந்திரன், செல்வம் உடந்தையா?

தமிழர் பகுதி சிங்கள மயமாக சுமந்திரன், செல்வம் உடந்தையா?

சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ்பிரமேச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ள விமர்சனங்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கடந்த பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வுடனான ஒரு சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் ஆணைக்கு புறம்பாக செயற்படுகின்றது. இந்த மக்கள் ஆணையில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கிறது.

முக்கியமாக இந்த கொள்கைகள் எல்லாம் கைவிடப்பட்டு இடைக்கால அறிக்கையில் சகலதும் கைவிடப்பட்டு வட, கிழக்கு இணைப்பு சம்மந்தமாகவும் சரி, சமஸ்டி சம்மந்தமாகவும் சரி இவ்வாறான விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணையில் இருந்து தாங்கள் முன்வைத்த கொள்கைகளில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கின்றது என்பதை மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முன்வைத்த கருத்துக்களாக இருந்தது.

ஆகவே இவ்வாறான சூழல் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக தங்களது உரிமைகள் தொடர்பாக கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். எனினும் தமிழரசு கட்சி கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளோடு ஆலோசிக்காமல் தாங்கள் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கின்ற காரணத்தினால் கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள், கைதிகளினுடைய உண்ணாவிரதம் குறைந்தபட்சம் அவர்களது வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாமை போன்ற விடயங்களில் கூட அரசாங்கம் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உறுதியாக இருக்கின்றது. அவ்வாறான விடயங்கள் கூட மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அரசாங்கம் கூறுகின்ற நல்லெண்ணம் என்ற விடயங்கள் அரசாங்கத்தினாலேயே குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இங்கு நாமல்கம, கலாபோகஸ்வௌ போன்ற இடங்களில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை போன்ற சிங்கள கிராமங்களில் இருந்து அழைத்து வந்து தமிழருடைய காணிகளை பறித்தெடுத்து சிங்கள பெயர்களை சூட்டி குடியேற்றப்பட்ட மக்களிற்கு அந்த காணிகளை தாரைவார்த்து கொடுப்பதற்கான உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த சம்பவம் என்பது நேற்று நடைபெற்றிருக்கிறது.

நல்லாட்சி என்கிற இந்த அரசாங்கத்தில் கூட எந்தவித மாற்றங்களுமின்றி மகிந்த எவ்வாறு தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை செய்தாரோ அந்த நிகழ்வுகளிற்கே தற்போது உறுதி வழங்கி வைக்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமையானது தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்குவதற்கு அரசாங்கத்துடன் உடந்தையாக செயற்படுகிறார்களா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே இவ்வாறான விடயங்கள் ஆரோக்கியமான விடயங்கள் அல்ல கூட்டமைப்பு என்கின்ற பேரில் தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக இவ்வாறான விடயங்களை கையாளுகின்றது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது என்ற அடிப்படையில் இது தொடர்பாக சரியான முடிவுகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுக்க வேண்டும் என்றும் மத்தியகுழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை எடுப்பதற்காக எமது கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாத முதலாவது வாரத்தில் நடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்கின்ற நிலைமை இருந்தால் கூட சில வேளைகளில் பிற்போடப்படலாம் என்கின்ற கருத்துக்களும் இருக்கின்றன. எனினும் அவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து போட்டியிடுவது என்பது தொடர்பாக அரசியல் குழு தீர்மானிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அரசியல் குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.