கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்

கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்

கடற்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் சூசைக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர்களில் சீலன் முக்கியமானவர். அவர் கடற்புலிகளின் பிரதித் தளபதியாக இருந்துள்ளார்.
கடற்படைக்கு எதிரான பல தாக்குதல்களின் போது தலைமை வகித்துள்ள சீலன், கடற்படையின் வள்ளங்கள் பலவற்றை அதிரடித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கவும் செய்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சீலனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
ஏனையவர்களைப் போன்று அவரைப்பற்றிய தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கடற்படையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் சீலன் எனப்படும் லோகேஸ்வரன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சீலன் அண்மையில் நேரில் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.