இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் பதிலடியில் 2 தீவிரவாதிகள் பலி

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் பதிலடியில் 2 தீவிரவாதிகள் பலி

காசா சிட்டி: ஜெருசலம் நகர விவகாரத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியானார்கள். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காசா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கி வந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், காசா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் மூன்று ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்தினர்.

அவற்றில் ஒரு ராக்கெட் இஸ்ரேல் நாட்டின் தென்நகரமான ஸ்டெராட் மீது விழுந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் நேற்று காலை காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தின. காசா நகரின் மத்திய பகுதியில் உள்ள நுசெய்ரட் நகரின் மீது தாழ்வாக பறந்துசென்ற போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் இரண்டு ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு, ராணுவ முகாம் ஆகியவை நாசம் அடைந்ததாகவும், ஹமாஸ் போராளிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை மொத்தம் 4 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பாலஸ்தீனம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு வரை ஜோர்டான் வசமிருந்த  கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் 1980ல்  இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலம் நகரில் யூத,  கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும்  இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறி அமைத்த  வசிப்பிடங்களில் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.