இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன?

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன?

"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர்.
"நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து தற்போது இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். இப்போது இது என்னுடைய நாடு. ஆனால், இந்தியாவுடனான எனது பாசத்தை இதனோடு ஒப்பிட முடியாது. "
மும்பைக்கு அருகே உள்ள தானேவின் ஸ்ரீராங் சொசைட்டியில் ஷெர்லி வாழ்ந்து வந்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் குடியேறினார். இப்போது இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஒன்றான கெதராவில் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் கல்வித் துறையின் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார்.இஸ்ரேலில் குடியேறுவதற்கு முன்பு, நான் இங்கு சுற்றுப்பயணத்திற்காக வந்தேன். என்னுடைய பல உறவினர்கள் இங்கு வசித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, இந்த நாட்டை வாய்ப்புகள் குவிந்துள்ள இடமாக பார்த்தேன். எனவே இங்கேயே குடியேற முடிவு செய்தேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.ஒரு நாட்டை சுற்றுலா பயணியாக பார்வையிடுவதற்கும், அந்நாட்டின் குடிமகனாக மாறுவதற்கும் அதிகளவிலான வித்தியாசம் உள்ளது. அதற்கான வேறுபாட்டை விரைவிலேயே உணர்ந்தார் ஷெர்லி.
"மிகப்பெரிய சவாலே பேசும் மொழிதான். நாங்கள் யூதர்களாக இருந்தாலும், மற்ற இந்தியர்களை போன்று மராத்தி, ஹிந்தி அல்லது ஆங்கிலம் போன்ற மொழிகளையே பேசுகிறோம். ஆனால் இங்கே இஸ்ரேலில், ஹீப்ரு கட்டாயமாகும். உங்களுக்கு ஹீப்ரு தெரியாவிட்டால் நீங்கள் முற்றிலும் முடங்கி விடுவீர்கள்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"எனவே, நான் அரசு நிதியில் செயல்படும் அடிப்படை ஹீப்ரு கற்றல் திட்டமொன்றில் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு என் சொந்த பணத்தை செலவிட்டு, ஹீப்ரு மொழியை கற்றுக்கொண்டேன். ஒரு இஸ்ரேலிய குடிமகனாக ஆவதற்குரிய போதுமான தகுதியை பெற்றேன்" என்று தனது தொடக்ககால சிரமங்களை நினைவுக் கூறுகிறார்.
மொழி மட்டுமல்லாது, சவால்கள் அனைத்து முனைகளிலும் இருந்தன. உணவு, உடை, பழக்கவழக்கம் மற்றும் மரபுகள்... என நீங்கள் எந்தவொரு காரியத்தை குறிப்பிட்டாலும் அது சவாலான விடயமாகவே இருந்தது. ஆனால் பெனி இஸ்ரேலியர்களை (இந்திய யூதர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை) போலவே, அந்த சவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார். ஆனால், இஸ்ரேலில் உள்ள யூதர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தை பழக்கப்படுத்தி கொள்வதே சிறந்த வழியாகும்.
"நாங்கள் இன்னும் எங்களது பாரம்பரியங்களை பராமரித்து வருகிறோம். பெனி இஸ்ரேலியர்களின் தனித்துவமான மரபுகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம் " என்று கூறி பெருமிதமடைகிறார் ஷெர்லி."கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் யூதர்கள் தரம் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். பல நாடுகளில் அவர்கள் கொடுமைகளை எதிர்கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்களது நாடுகளை மறக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பதை விரும்பவில்லை."
"ஆனால், பெனி இஸ்ரேலியர்களான நாங்கள் அதில் மாறுபட்டவர்கள். இந்தியா எங்களை மரியாதையுடனும், அன்புடனும் உபசரித்தது. நாங்களும் அதே உணர்வை திரும்ப அளிக்கிறோம்" என்று தான் இந்தியா மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை ஷெர்லி வெளிப்படுத்துகிறார்.ஷெர்லி பால்கர் மட்டும்தான் இஸ்ரேலில் குடியேறிய மராத்தி மொழி பேசும் பெனி இஸ்ரேலிய யூதர் அல்ல. மராத்தி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் பேராசிரியர் விஜய் தபாஸ். இவரது பயணமே 1948ம் ஆண்டு உருவான இந்த யூத தேசத்திற்கு மராத்திய யூதர்கள் தங்களது "நம்பிக்கையளிக்கும் நாட்டிற்கு" புலம்பெயரத் தொடங்கிய வரலாறு குறித்து தெரிய வருகிறது. பீர்ஷெவா, அஷ்டோட் அஷ்கலோன், லோட், ராம்லே, எருஹம், டிமோனோ, ஹைபா போன்ற இஸ்ரேலிய நகரங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெனி இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர்.ஆனால், இது பெனி இஸ்ரேலியர்களின் முதல் குடிபெயர்வு இல்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அந்நேரத்தில் அது தலைகீழ் இடம்பெயர்வாக இருந்தது. அதாவது, இஸ்ரேலிலிருந்து மகாராஷ்டிராவுக்கு!
இன்றைய மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் இஸ்ரேலில் துன்புறுத்தலுக்குள்ளான யூத குடும்பங்களைச் சுமந்து வந்த கப்பல் உடைந்தது. அவ்விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் நவ்கோனை என்ற கிராமத்தின் கரையை வந்தடைந்தார்கள்.
அவர்கள் தங்களது அன்புக்குரியவர்களை அதே கிராமத்தில் அடக்கம் செய்தார்கள். இதுதான் இந்தியாவில் யூதர்களின் முதல் மயான இடமாகும்.
ராய்காட் மாவட்டத்திலுள்ள உள்ளூர் மக்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கு இவர்களின் மொழியும், அசாதாரண பழக்கங்களும் போதுமானதாக இருந்தது.இவர்கள் அவ்விடத்தை வந்தடைந்தபோது "நாங்கள் பெனி இஸ்ரேலியர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
"ஹீப்ரு மொழியில் பெனி என்றால் மகன் என்று அர்த்தம். எனவே, இந்த சமூகம் தங்களை தாங்களே 'இஸ்ரேலின் மகன்கள்' என்று அழைத்துக் கொண்டது" என்கிறார் ருயா கல்லூரியின் வரலாறுத்துறை பேராசிரியரான மொஹசினா முகடம்.
கொங்கன் பகுதியில், பெனி இஸ்ரேலியர்கள் ஷான்வர் டெலிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலத்தில் 'ஷானிவார்' என்றால் 'சனிக்கிழமை' என்றும் தெலி என்பது எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்பவர்களையும் குறிக்கும்.
மகாராஷ்டிராவின் யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் (பெனி இஸ்ரேல்) ஷானிவர் டெலிஸ் என்று அறியப்படுகின்றனர். யூதர்களின் வழக்கத்தின்படி வாரத்தின் ஏழாவது நாளாக சனிக்கிழமையை கருதி அதை ஷப்பாட் என்று அழைப்பதுடன் அன்று பணிபுரிவதை தவிர்க்கின்றனர்.பெனி இஸ்ரேலியர்கள், இந்திய மண்ணில் தங்கள் கால்களை வைக்கும் முன் அவர்கள் எதிர்கொண்ட நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, அவர்களின் புனித நூல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யம் அளிப்பதாக இல்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாக மத நூல்களுடன் எவ்வித தொடர்பையும் கொள்ளவில்லை. யூத பாரம்பரியங்களை தங்களது மனதில் நிலை நிறுத்தியவர்கள் அதை பின்தொடர்ந்தார்கள்.
பிரிட்டிஷ் தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது, கொங்கன் பகுதியிலிருந்து பல பெனி இஸ்ரேலியர்கள் மும்பைக்கு வந்தனர். 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த யூதர்கள் தங்களின் 'நம்பிக்கையளிக்கும் தேசத்திற்கு' திரும்பி வரும்படி முறையீடு செய்யப்பட்டது. இந்த அழைப்பை ஏற்ற பல பெனி இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், இஸ்ரேலில் குடியேறிய பின்னரும் கூட, அவர்கள் தங்களின் மகாராஷ்டிர கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
இரண்டு கலாச்சாரங்களின் கலப்பு
"முந்தைய பெனி இஸ்ரேலியர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாக காணப்படவில்லை. ஆனால், இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த மக்களின் சில அசாதாரண பாரம்பரியங்களை உற்றுநோக்கினர். யூதர்கள் மீன்களை செதில்களோடு மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்யவில்லை. அவர்களின் சமையல் முறை வேறுபட்டது. விலங்குகளை கொல்லும் முறை கூட தனித்துவமானது. இவற்றையெல்லாம் கவனித்த பிரிட்டிஷ்காரர்கள் இம்மக்கள் யூதர்கள் என்று உணர்ந்து கொண்டனர்" என்கிறார் மொஹசினா முகடம்.
"பிரிட்டிஷ் சகாப்தத்தில் பெனி இஸ்ரேலியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அவர்கள் இராணுவம், ரயில்வே, மருத்துவ சேவைகள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றினர்" என்று புனேவில் உள்ள பெனி இஸ்ரேலியரான சாமுவேல் ரோஹெர்கார் கூறுகிறார்.
"அவர்கள் மும்பைக்கு வந்தபோது, இன்றைய மஸ்ஜித் நிலையத்திற்கு அருகே ஒரு யூத வழிபாட்டு தலத்தை கட்டினார்கள்" என்கிறார் சாமுவேல்.
"யூத வழிபாட்டு தலத்தில் எந்த சிலையையும் உங்களால் காண முடியாது. எங்கள் புனித நூல்களை ஒரு அலமாரியில் வைத்திருக்கிறோம். அந்த அலமாரியானது மேற்குப்புறத்தில் வைக்கப்படும். ஹீப்ருவில் இந்த புத்தகங்களை 'செபர் டோரா' என்று அழைத்தார்கள். ஒரு மாதத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமையன்று புனித நூல்களை அவர்கள் ஓதினார்கள்" என்று சாமுவேல் கூறுகிறார்.
மாலிடாபெனி இஸ்ரேலியர்கள் பல இந்து மரபுகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றினர். உதாரணமாக, திருமண சடங்குகள் அல்லது வளையல்கள் போன்றவை இந்து மரபுகளிலிருந்து எடுக்கப்பட்டன.
யூதர்களின் திருமண விழாக்களில் வழங்கப்படும் திராட்சை மதுவுக்கு சிறப்பிடம் உண்டு. அவர்கள் இந்த மதுவை கிதுஷ் என்று அழைக்கிறார்கள். யூதர்களின் கொண்டாட்டங்களில் கிதுஷுக்கு சிறப்பிடம் இருக்கிறது. திருமண விழாவில் கிதுஷ் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பெனி இஸ்ரேலியர்களது சிறப்பு பண்டிகை உணவாக 'மாலிடா' என்பது உள்ளது. இது மராத்திய இந்து மதத்தின் பாரம்பரியமான 'சத்யநாராயண்' போன்ற செயற்பாட்டை கொண்டது. இது ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் செய்யப்படுகிறது."பெனி இஸ்ரேலியர்களுக்கும் மற்ற யூதர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஷெர்லி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். "மற்ற நாடுகளில் யூதர்கள் அட்டூழியங்களுக்கு உள்ளானார்கள். எனவே, அவர்கள் உள்ளூர் மக்களுடன் இணையவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அது வேறுபட்ட பின்புலத்தை கொண்டது. இந்தியர்கள் எங்களுக்கு மரியாதையுடனும் மற்றும் கண்ணியத்துடன் நடத்தினார்கள். எனவே, நாங்கள் மற்ற இந்திய சமூகங்களோடு இணைந்தோம். அதன் காரணமாக மற்ற சமூகத்தினரின் மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் எங்களுடையதானது" என்று ஷெர்லி பால்கர் கூறுகிறார்.
மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்
முதன் முதலில் இஸ்ரேலுக்கு சென்ற பெனி இஸ்ரேலியர்கள் மராத்தி மொழியை நன்றாக பேசக்கூடியவர்கள். ஆனால், அவர்களது புதிய தலைமுறை மராத்தி மொழியை நன்றாக பேசுவதில்லை. எனவே, பெனி இஸ்ரேலிய சமூகத்தினர் மராத்தி கற்றல் படிப்புகளை துவங்கினர்.
இதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் விஜய் தபாஸ் மும்பையில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றார். "பெனி இஸ்ரேலியர்களுக்கு மராத்தி மீது பெரும் மரியாதை உண்டு. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல யூத வழிபாட்டுத் தலங்களுக்கு இம்மக்களால் நிதியளிக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.பல ஆண்டுகளாக இஸ்ரேலில் தங்கிய பின்னரும் கூட, பெனி இஸ்ரேலியர்களுக்கு இந்தியா குறித்து தங்கள் மனதில் சிறப்பிடம் உண்டு. "எங்கள் இதயத்தின் தனியிடத்தில் இந்தியா உள்ளது. நாங்கள் இன்னும் அங்கே போகிறோம். சமீப காலம் முன்னர்வரை என் பெற்றோர் தானேயில் இருந்தார்கள். என் சகோதரி மும்பையில் இருக்கிறார். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம், 'சாப்பிட வேண்டிய' உணவு வகைகள் குறித்த பட்டியலை தயார் செய்கிறேன். வாடா-பாவ் மற்றும் சாட் பொருட்களை நான் விரும்புகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
அவளுடைய பெற்றோர் சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால், அங்குள்ள மாற்றத்தை சமாளிக்கப்பதற்கு அவர்களுக்கு கடினமாக உள்ளது.
அவருடைய மகள் இஸ்ரேலில் பிறந்தாள். அவரால் மராத்தி மொழியை பேச முடியும். ஆனால், இனி எப்போதுமே இந்தியாவில் இருப்பதற்கு அவர் விரும்பவில்லை.
டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து
"ஜெருசலேம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள மராத்திய யூதர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்னரும், இப்போதும் ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகரம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விடயங்கள் விரைவாக மாற்றப் போகின்றன. ஜெருசலேம் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொள்ள போகிறது, அதற்காக நான் கவலைப்படுகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஜெருசலேமில் நிலைமை எப்போதும் பதட்டமாக இருக்கிறது. மேலும், சமீபத்திய நிகழ்வுகள் வன்முறையை தூண்டலாம். ஆனால் நாங்களும், எங்களது இராணுவமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்" என்கிறார் ஜெருசலேம் நகரத்தை சேர்ந்த மராத்தி யூதரான நோவா மசில்.