ரஷ்யா உதவியுடன், இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள்

ரஷ்யா உதவியுடன், இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள்

மாஸ்கோ : 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்திய ராணுவத்துக்காக, 140 அதிநவீன ஹெலிகாப்டர்களை தயாரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரஷ்யாவுடன், 6,500 கோடி ரூபாய் மதிப்பில், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நனவாக்க அரசு தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'மேக் இன் இந்தியா' என்ற பெயரில், இந்தியாவில் பொருட்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறது.


ஆர்வம்


ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் போர் தளவாடங்களை, உள்நாட்டில் தயாரிப்பதில், மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த, 2015 டிசம்பரில், பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது, 6,500 கோடி ரூபாய்மதிப்பில், இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்காக, 200 அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.

'கமோவ் - 226டி' எனப்படும், அந்த ஹெலிகாப்டர்களில், 60 ஹெலிகாப்டர்கள், தயார் நிலையில், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட உள்ளன.மீதமுள்ள, 140 ஹெலிகாப்டர்களை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திய ராணுவத்திடம் நீண்ட காலமாக, 'சீட்டா, சேடக்' எனப்படும், போர் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக, நவீன வசதிகள் செய்யப்பட்ட, 'கமோவ்' ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.
அக்டோபரில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ், ரோஸோபரோனெக்ஸ்போர்ட் ஆகிய இரு நிறுவனங்கள், கூட்டு முயற்சியில், ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளன.


ஒப்பந்தம்


இது தவிர, இந்திய கடற்படைக்காக, ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து, 111 பிரமாண்ட ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 'நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்' என, நிபுணர்கள் கருதுகின்றனர்.


4 கட்டங்களாக தயாரிப்பு பணி


'கமோவ்' ஹெலிகாப்டர் தயாரிப்பு பணி, நான்கு கட்டங்களாக நடக்க உள்ளதாக, 'கமோவ் - 226டி' ஹெலிகாப்டர் தயாரிப்பு திட்ட இயக்குனர், டிமிட்ரி ஸ்வெட்ஸ் கூறினார்.

நிருபர்களிடம், டிமிட்ரி ஸ்வெட்ஸ் கூறியதாவது: ரஷ்யா - இந்தியா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, கமோவ் - 226டி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தப்படி, ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழில்நுட்பமும், இந்தியாவுக்கு மாற்றித் தரப்படும். நான்கு கட்டங்களாக, இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்க, திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் பாகங்கள், இந்தியாவுக்கு, 'டெலிவரி' செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில், கூட்டு தயாரிப்பில் உருவான பாகங்கள் டெலிவரி செய்யப்பட்டு,


இந்தியாவில் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கும். தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உதவிகள் அளிக்கப்படும்.

மூன்றாவது கட்டத்தில், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்ட மூலப்பொருட்களை வைத்து, உற்பத்தி மற்றும் கட்டுமான பணிகள் நடக்கும். நான்காவது கட்டமாக, முழுமையான ஹெலிகாப்டர் உருவாக்கப்படும். இது தவிர, ஹெலிகாப்டர் பராமரிப்பு மையம், சேவை மையம், இந்தியாவில் நிர்மாணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சிறந்த பலன் கிடைக்கும்


ரஷ்யாவைச் சேர்ந்த, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவன தலைவர், ஆண்ட்ரே போகினிஸ்கி,நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய கடற்படைக்கு, 111 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றுடன், 'கமோவ் - 226டி' ஹெலிகாப்டர்களை, இந்திய கடற்படை பயன்படுத்தினால், சிறப்பான பலனை பெற முடியும்.

கமோவ் ஹெலிகாப்டர்களை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்தியாவில் தயாரிப்பதற்கான பணியில், நாங்கள் உதவுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.