புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதில்லை

புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதில்லை

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகநாங்கள் அறிந்திருக்கவில்லையென வடமாகாணமகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு Tablet களை வழங்கிவைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மூன்றுலட்சம் ரூபாபெறுமதியில் 20 மாணவர்களுக்கு Tablet கள் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது. கிழக்குபல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கு Tablet களை வழங்கிவைத்து அமைச்சர் உரையாற்றியபோது மேலும் தெரிவிக்கையில்…

கிழக்குடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வடக்கில் அதிகரித்த நிலையிருப்பதை காணக்ககூடியதாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டுமாயின் கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதனையேநான் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றேன்.

பெண்கள்தான் பெண்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் அரசியலில் பெண்களின் வகிபாகம் மிகமிகசொற்பமாபகவே இருந்துவருகின்றது. இந்தநாட்டில் நூற்றிற்கு 52 வீதமானபெண்கள் இருக்கின்றபோதிலும் பெண்களின் அரசியல் பற்கேற்பென்பது சொற்பமாகவே இருக்கின்றது. உள்ளுராட்சி தேர்தல்களத்தை பார்த்தோமானால் வெறும் 1.8 சதவிகிதமே பெண்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் 2.8 சதவிகிதமான பெண்களே இருக்கின்றார்கள். வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 38 உறுப்பினர்களில் ஒரேஒருபெண் பிரதிநிதியாகநான் மட்டுமே இருக்கிறேன். ஆகவேதான் கொள்கையடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதைவலியுறுத்திக் கூறிவருகின்றேன்.

வட மாகாண சபையில் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி யொதுக்கீட்டில் கிழக்குபல்கலைக் கழகத்தில் கல்விபயிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக தமிழர்களாகிய நாம் கல்வியையும் பொருளாதாராத்தினையும் இழந்துள்ளோம். பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் அதேநேரம் கல்வியிலும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.

பல்கலைக் கழக கற்கையை தொடர்வதற்காக ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அவர்களின் தேவை அதிகரித்து வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையில் மாணவர்கள் இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் இவ்விடயம் தெரியப்படுத்தப்படாத காரணத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவிகளைச் செய்ய முடியாதிருந்தது.

இருந்தபோதிலும் எம்மால் முடிந்தளவுக்கு நாங்கள் பதவியில் இருக்கும் வரை உதவிகளை வழங்குவோம். இவ்வாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிகளைச் செய்ய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலம் ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு தேசமாகவே இருக்கின்றோம். எங்களுக்குள் பிரிவுகளும் பிளவுகளும் இல்லை. அந்த கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக்காக நாங்கள் நீதி கோரும் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் நிலையிலும் நாங்கள் அபிவிருத்தியையும் கல்விமேம்பாட்டினையும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.