ஐ.நா-வில் அமெரிக்காவுக்கு பலத்த அடி!

ஐ.நா-வில் அமெரிக்காவுக்கு பலத்த அடி!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கப்பட்டதற்கு, ஐ.நா-வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டுமென 128 நாடுகள் வாக்களித்துள்ளன.இலங்கை, இந்தியாவும், அமெரிக்காவின் முடிவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளது.

சமீபத்தில், இஸ்ரேல் தலைநகராகத் தொன்மையான ஜெருசலேம் நகரை அமெரிக்கா அங்கீகரித்தது. கடந்த 1967-ம் ஆண்டு, பாலஸ்தீனப் போரின்போது, கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகள் இந்த நகருக்கு உரிமைகொண்டாடி வரும் வேளையில், அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா அறிவிப்பை திரும்பப் பெறவேண்டுமென, ஐ.நா-வில் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா அவையில், 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்துள்ளன. ஆதரவாக 9 ஓட்டுகளே கிடைத்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 21 நாடுகள் வாக்குப்பதிவு செய்யவில்லை. வாக்கெடுப்பின்போது நழுவிய நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா போன்றவை முக்கியமானவை. அமெரிக்காவுக்கு ஆதரவாக பலம்வாய்ந்த நாடுகளுள் ஒன்றுகூட வாக்களிக்கவில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, டோகோ போன்ற குட்டி நாடுகள்தான் வாக்களித்திருந்தன. பாகிஸ்தானும்கூட அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, ‘அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளைக் குறித்துவைத்து நிதியுதவியை ரத்து செய்வோம்’ என்று எச்சரித்திருந்தார். ஆனால், எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்கு ஐ.நா சபையில் பலத்த அடி கிடைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பாலஸ்தீன விவகாரத்தில், ‘ எங்கள் நாட்டுக்குள்ள சுதந்திரமான கொள்கை முடிவைத்தான் பின்பற்றுவோம் ‘ என்று தெளிவாகக் கூறிவிட்டது. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பாலஸ்தீனத்துக்கு மோடி செல்லவில்லை. அடுத்தமாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நாதன்யாகு இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்துள்ளது. வங்கதேசம், மாலத்தீவு நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளன.