அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும், பிரான்ஸ்

அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும், பிரான்ஸ்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்சை பொருத்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உள்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.