சோபியா ரோபோ , குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்

சோபியா ரோபோ , குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்

சவுதி அரேபியாவின் சோபியா ரோபோ குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்த  நிலையில், இந்த ரோபோ, குடும்பம்தான் `மிகவும் முக்கியமான விஷயம்` என்று தெரிவித்துள்ளது. சோபியா ரோபோ முன்பே பதில்கள் பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து, அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில், இயந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும்.

அசரவைக்கும் திறமைகள் இருந்தாலும், சோபியாவிற்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன், இன்னும் சில வருடங்களில், ரோபோவிற்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கின் `ஹன்சன் ரோபோடிக்ஸ்` நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோ, தன்னுடைய `மகள் ரோபோவிற்கு` தனது பெயரையே வைப்பேன் என்று தெரிவித்துள்ளது.அதன் மூளை சாதாரண வை-பை வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில், வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சோபியா ரோபோ, "குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது" எனக் கூறியுள்ளது."சொந்த ரத்த வகையைத் தாண்டியும், மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று" என்கிறது.

"உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோபியாவிடம் கேட்டபோது, `சோஃபியா` என்றே பதிலளித்தது. சோபியா ரோபோவால், கலந்துரையாட முடியும், சிரிக்க முடியும், நகைச்சுவைகளும் சொல்ல முடியும்