ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்ய முடியாது..!

ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்ய முடியாது..!

ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாத காரியம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ப்ளூவேல் விளையாட்டால் பலர் பலியாதை அடுத்து இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்யாதது ஏன் எனவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதில், ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய முடியாது. ஏனெனில் அவை ஆப்ஸ் சார்ந்த விளையாட்டுக்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலில் திருப்தி அடையாத தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இது போன்ற மரணத்தை விளைவிக்கும் விளையாட்டுக்கள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தும் படி தெரிவித்துள்ளது.

மேலும், ப்ளூவேல் விளையாட்டு ஒரு தேசிய பிரச்னை. மாநிலங்களில் இயக்கப்படும் தூர்தர்ஷன் மற்றும் தனியார் டிவி சேனல்களும் இத்தகைய மரண விளையாட்டுக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இத்தகைய விளையாட்டுக்களால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் வகையிலான பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.