செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன்! – சர்வேஸ்வரன்

செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன்! – சர்வேஸ்வரன்

சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக்கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என தந்தை செல்வா கூறியிருந்தார். அவரின் வழியிலேயே நான் அதனை ஏற்ற மறுத்தேன் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவர் ‘இலங்கையின் தேசியக்கொடியாக வடிவமைக்க்பபட்ட வாளேந்திய சிங்கம் பதிக்கப்பட்ட சிங்கக்கொடி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற கொடியாக இருப்பதால், அதனை நாங்கள் தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று 1950 இல் தந்தை செல்வா கூறியிருந்தார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு பேச்சுக்களின் போதும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேசுகின்ற போது தேசியக்கொடியை மாற்றுகின்ற விடயம் குறித்து பேசப்பட்டுள்ளன.

தேசியக்கொடி என்பது ஒரு பிரச்சினையாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எமக்குத் தெரிந்த மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன,விடுதலைப்போராட்ட இயக்கங்களாக இருந்தாலென்ன, அதற்குப்பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர் தந்தை செல்வாவின் கொள்கையைப் பிரதி பலிக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்ற உறுதியான கொள்கையுடனேயே செயற்பட்டு வருகின்றனர்.

அதனால்,அதற்கான எதிர்ப்பையும் காட்டிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக்கூட்டத்தில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவருக்கருகில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சம்பந்தன் தேசியக்கொடியை கையிலே வைத்து ஆட்டுகின்ற படங்கள் பத்திரிகையிலே வெளிவந்தன.

அதனைப்பார்த்த பின்னர் பத்திரிகைகளில் பல்வேறு கண்டனங்களும், மிகக்கடுமையான விமர்சனங்களும் வந்தன. அதேவேளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தேசியக்கொடியை சம்பந்தர் கையில்வைத்து ஆட்டியதைப்பார்த்து மிகப்பெரிய விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களுக்குப்பதிலாக அடுத்த நாளே சம்பந்தருடைய சார்பிலே தான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று இப்போது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராசா அறிக்கைவிட்டார். ஆகவே அன்று சம்பந்தர் கொடி ஏற்றியது தவறு என்று அறிக்கை விட்டு மன்னிப்பு கோரிய போது அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத சிங்கள இனவாதம் இன்றைக்கு அதனைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச இருக்கின்ற போது சிங்கக்கொடியை ஆட்டியது தவறு என்று கூறிய தமிழரசுக்கட்சி இன்று மைத்திரி ஆட்சியில் அந்தக்கொடி ஏற்ற மறுத்தமை தொடர்பில் மௌனம் சாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த விடயத்தை தூக்கிப்பிடிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதால்,அரசு மீண்டும் தேசியக்கொடி தொடர்பில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.

இப்போது இருக்கின்ற சிங்களத்தலைவர்கள் சிலர் இது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்று பேசுகின்றனர். அரசியலமைப்பின் மீது நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம். அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து விட்டு நாங்கள் அதை மீறுவதாக கூறியிருக்கின்றனர். இது தவறான விடயம் என்று கூறுகிறேன். ஏனெனில் இந்த அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் நாட்டின் ஜனாதிபதியும் வருகிறார். இந்த அரசியலமைப்பை நான் போற்றிப்பாதுகாப்பேன்,அவற்றை நடைமுறைப்படுத்துவேன் என்று தான் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட அனைவருமே சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் யாப்பிலே 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கான பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க மாட்டேன் என்று ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகளும், இப்போது இருக்கின்ற ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர். ஆகவே அரசியல் யாப்பிலே கொடுத்திருக்கக்கூடிய பொலிஸ் காணி அதிகாரங்களை நான் நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று சொல்வது அரசியல் யாப்பை மீறுகின்ற ஒரு செயலாக இவர்களுக்குத் தெரியவில்லையா.? ஆகவே இவ்வாறு அவர்கள் பகிரங்கமாகவே அரசியல் யாப்பை மீறுகின்ற போதெல்லாம் வாய் திறக்காதவர்கள் இன்று சிங்கச் சின்னம் பொறித்த கொடி ஏற்றவில்லை என்பதற்கு மட்டும் வாய் திறப்பதென்பது இன்று இருக்கக்கூடிய முக்கியமான அரசியல் விடயங்களில் இருந்து மக்களை திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த சமரசிங்க உரையாற்றுகையில், “வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தேசியக்கொடியை ஏற்றாமல் புறக்கணித்திருக்கிறார். ஆகவே நாங்கள் எப்படி அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியும்” என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி கேள்வி கேட்கின்ற போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாரேனும் அதற்குப்பதில் சொல்லவில்லை. அதனுடைய அர்த்தம் என்ன? அவர்கள் அனைவரும் இந்த தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டு விட்டார்களா? அல்லது தமிழரசுக்கட்சி தந்தை செல்வா என்று சொல்லிக்கொண்டு செல்வாவின் கொள்கைகளை குழி தோண்டிப்புதைத்து விட்டதா?

இன்றைய ஊடகங்களிலே இந்த விடயம் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் சரி,வெளியிலும் சரி வாய் மூடி மௌனிகளாக இருப்பது இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்விக்கான பதில்களை எங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து பெறவேண்டும் – என்றார்.